வியாழன், ஏப்ரல் 30, 2009

கண்ணுக்குத் தெரியாத வேர்கள்

சொந்த நாய்களுக்குச்
சொத்தெழுதி வைக்கும் தேசங்களே!
ஓர் இனமே
நிலமிழந்து நிற்கிறதே
நிலம் மீட்டுத்தாருங்கள்

பூனையொன்று காய்ச்சல் கண்டால்
மெர்சிடீஸ் கார் ஏற்றி
மருத்துவமனை ஏகும் முதல் உலக நாடுகளே!

ஈழத்து உப்பங்கழியில்
மரணத்தை தொட்டு
மனித குலம் நிற்கிறதே!
மனம் இரங்கி வாருங்கள்!

வற்றிய குளத்தில் செத்துக் கிடக்கும்
வாளை மீனைப்போல்
உமிழ்நீர் வற்றிய வாயில்
ஒட்டிக்கிடக்கும் உள்நாக்கோடு
ரொட்டி ரொட்டியென்று
கைநீட்டிம் சிறுவர்க்குக்
கை கொடுக்க வாருங்கள்!

தமிழச்சிகளின் மானக்குழிகளில்
துப்பாக்கி ஊன்றித் துளைக்கும்
சிங்கள வெறிக் கூத்துக்களை
நிரந்தரமாய் நிறுத்துங்கள்!

வாய்வழி புகட்டிய தாய்ப்பால்
காதுவழி ரத்தமாய் வடிவது கண்டு
கண்வழி உகுக்கக் கண்ணீரின்றிக்
கண்ணீரை மாற்றுங்கள்!

அடுக்கிவைத்த உடல்களில்
எந்த உடல் தகப்பன் உடல் என்று தேடி
அடையாளம் தெரியாத ஒரு பிணத்துக்கு
அழுதுதொலைக்கும் பிள்ளைகளின்
அவலக்குரல் போக்குங்கள்!

எனக்குள்ள கவலையெல்லாம்
இனம் தின்னும்
ராஜபக்சே மீதல்ல…
ஈழப்போர் முடிவதற்குள்
தலைவர்கள் ஆகத்துடிக்கும்
தலையில்லாப் பேர்வழிகள் மீதல்ல
எம்மைக்
குறையாண்மை செய்துவைத்த
இறையாண்மை மீதுதான்!

குரங்குகள் கூடிக்
கட்டமுடிந்த பாலத்தை
மனிதர்கள் கூடிக்
கட்ட முடியாதா?

போரின் முடிவென்பது
இனத்தின் முடிவல்ல
எந்த இரவுக்குள்ளும்
பகல் புதைக்கப்படுவதில்லை
எந்த தோல்விக்குள்ளும்
இனம் புதைக்கப்படுவதில்லை
அழிந்தது போலிருக்கு அருகம்புல்
ஆனால்
கண்ணுக்குத் தெரியாத வேர்கள்

அங்கே
சிந்திய துளிகள்
சிவப்பு விதைகள்
ஒவ்வொரு விதையும் ஈழமாய் முளைக்கும்
பீரங்கி ஓசையில்
தொலைந்து போன தூக்கணாங்குருவிகள்
ஈழப்பனைமரத்தில்
என்றேனும் கூடுகட்டும்!

காகிதப் பூக்கள்

விலக்குகளே சில சமயம்
விதிவிலக்காய் அமைவதுண்டு
விளக்கங்கள் இதற்குமில்லை
விதிவிலக்கா விதியின் எல்லை

வாசமுள்ள பூக்கள் தானே
கோவில் வரை வந்துபோகும்
காகிதப் பூக்கள் மட்டும்
கலங்கிடாமல் அதை ரசிக்கும்

ஆர்ப்பரிக்கும் அலையின் திரை
அதிசயிக்க தோன்றும் - அது
அத்துமீறி ஊர்புகுந்தால்
என்ன சொல்லி மாழும்

பாரினிலே மீதமெல்லாம்
எதற்கெனிலும் ஒன்றிற்காகும்
பாவி உன்னை சுட்டால் கூட
சாம்பலிலும் தீட்டிருக்கும்

குறைபட்ட மானிடமே
உன் நினைப்பினிலும் குறையிருக்கு
நீ ஒதுக்கி வைப்பதெல்லாம்
உனக்காக இருந்ததில்லை
நீ ரசிக்கும் எதுவும் இங்கே
உன்னை நம்பி படைத்ததில்லை

படைத்தவனை காவல்காக்க
பழகிக்கொண்ட உந்தனுக்கு
பகுத்தறிய முடியவில்லை
பாவம் உன்னை என்ன சொல்ல

விலக்குகள் இதற்கும் உண்டா
இல்லை இது விதிவிலக்கா...?